மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஊழல் லங்கா தகர்க்கப்படும். மேலும், சிந்த்வாரா மாவட்டத்தில் அக்கட்சி தனது கணக்கைத் திறக்க முடியாது என்று மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஹலாத் சிங் படேல் தெரிவித்திருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தாமோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய இணை அமைச்சருமான பிரஹலாத் சிங் படேல், சிந்த்வாரா மாவட்டம் நரசிங்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர்தான், காங்கிரஸ் கட்சியின் ஊழல் லங்கா தகர்க்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறுகையில், “முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். கட்சியின் இந்த முடிவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவதாக, எனது ஜென்மபூமி மற்றும் கர்மபூமியில் முதல் முறையாக போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் 2003 சட்டமன்றத் தேர்தலை மிகவும் உன்னிப்பாக கவனித்தேன். அப்போது, காங்கிரஸ் கட்சி சிந்த்வாரா மாவட்டத்தில் கணக்கைக்கூட திறக்கவில்லை. அதேபோல, 2023 சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி சிந்த்வாராவில் கணக்கைத் திறக்காது என்ற எனது உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறேன். காங்கிரஸ் கட்சியின் ஊழல் லங்கா இங்கு தகர்க்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.
பிரஹலாத் சிங் படேல் தவிர, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங், மத்திய அமைச்சர் ஃபக்கன் சிங், கைலாஷ் விஜயவர்கியா ஆகியோரும் மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.