சீனாவுடனான உறவு ஒருபோதும் சுமுகமாக இருந்ததில்லை. கடந்த 3 தசாப்தங்களாக இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருக்கிறார். அங்கு, வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் விவாதத்தில் பேசிய ஜெய்சங்கர், “கடந்த 3 தசாப்தங்களாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா தனது ஈடுபாடுகளை கணிசமாக விரிவுபடுத்தி இருக்கிறது. இது அமெரிக்கா மற்றும் இந்திய மூலோபாயவாதிகள் மத்தியில் வளர்ந்து வரும் கடற்படை இருப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை “கடன் பொறி இராஜதந்திரம்” என்று அழைப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இறுதி நோக்கங்கள் ஓரளவு தெளிவற்றதாக இருந்தாலும், சீனத் தலைமையானது பிராந்தியத்தில் பலவிதமான இராணுவப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் திறன்களைத் தீவிரமாகப் பின்பற்றுகிறது என்பது தெளிவாகிறது. தீவிர கிழக்கு-மேற்கு துருவமுனைப்பு மற்றும் வடக்கு-தெற்கு பிரிவினையைக் குறைக்கும் திறன் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எங்கள் சொந்த விஷயத்தில், சீனாவின் துறைமுக செயல்பாடுகளையும், கட்டுமானங்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
நீங்கள் குவாதார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இலங்கையில் ஹம்பந்தோடா துறைமுகத்தைப் போல இன்னும் சிலவும் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் பின்னோக்கிப் பார்த்தால், அன்றைய அரசாங்கங்களும், அன்றைய கொள்கை வகுப்பாளர்களும் இதன் முக்கியத்துவத்தையும், எதிர்காலத்தில் இத்துறைமுகங்கள் எவ்வாறு செயல்படக்கூடும் என்பதையும் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம் என்று நான் கூறுவேன். ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் மிகவும் தனித்துவமானது. நாங்கள் எந்தவொரு பாதுகாப்பு தாக்கங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நாம் முன்பு இருந்ததை விட மிகப் பெரிய சீன இருப்புக்குத் தயாராக இருப்பது முக்கியம்.
2009-ம் ஆண்டு உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு, 2013-ம் ஆண்டு வரை நான் சீனாவில் தூதராக இருந்தேன். அப்போது, சீனாவில் பாதுகாப்பு மாற்றத்தைக் கண்டேன். சீனாவுடனான உறவு கடந்த 75 ஆண்டுகளில் ஒருபோதும் சுமுகமானதாக இருந்ததில்லை. சீனர்கள் தங்கள் செயல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணத்தைக் கூறாததால், சில தெளிவின்மை எப்போதுமே இருக்கிறது. சீனாவைக் கையாள்வதில் மகிழ்ச்சிதான். எனினும், ஏன் இவ்விஷயங்களைச் செய்கிறார்கள் என்பதை ஒருபோதும் சொல்வதில்லை. எனவே, நீங்கள் அதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால், அதில் எப்போதும் தெளிவின்மைதான் நிலவுகிறது.
சமீபத்திய சீனாவின் ஆத்திரமூட்டல்களால் இந்தியா மற்றும் சீனா இடையேயான இறுக்கமான உறவு மேலும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, 2023-ம் ஆண்டு சீனா “நிலையான வரைபடம்” என்று கூறி ஒரு வரைபடத்தை வெளியிடப்பட்டது. அதில், அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் “அக்ஷாய் சின்” என்று குறிப்பிட்டு உரிமை கோரியது. மேலும், ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு விசா வழங்க மறுத்து விட்டது.
கடந்த 10 ஆண்டுகளைப் பார்த்தால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நாங்கள் பல அமைப்புகளில் உறுப்பினர்களாகி விட்டோம். 2008-க்குப் பிறகு 2017-ல் குவாட் புத்துயிர் பெற்றது. இது சீராக மேம்படுத்தப்பட்டு, 2021-ல் தலைமை நிலைக்கு வந்துவிட்டது. அதேபோல, மிக சமீபத்தில் நிறைவேறிய இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடமாகும். இது தவிர, எங்களிடம் I2U2 என்ற குழு இருக்கிறது. இதில், இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் ஆகியவை அடங்கும். நாங்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சேர்ந்தோம். எங்களிடம் இன்னும் சில உள்ளூர் அமைப்புகளும் உள்ளன” என்று கூறியிருக்கிறார்.