வடக்கு ஈராக்கில் திருமணக் கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 100 பேர் உயிரிழந்ததுடன், 150-க்கும் மேற்பட்டடோர் படுகாயமடைந்துள்ளனர்.
வடக்கு ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா என்னும் நகரில், நேற்று நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண கொண்டாட்டத்தின் போது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடத்தின் கூரைகள் ஆங்காங்கே இடிந்து விழுந்தது. இதன் காரணமாக, தீ வேகமாக பரவியது. இந்த இடிபாடுகளில் பலர் வெளியேற முடியாமல் சிக்கி, தீயில் கருகி உயிரிழந்தனர்.
இதன் காரணமாக, குறைந்தது 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த இடிபாடுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும், உயரம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து, ஈராக்கின் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது முதற்கட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருமணக் கொண்டாட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்திகள் மற்றும் பிற எரியக்கூடிய பொருட்களால் இந்த விபத்து ஏற்பட்டது. மேலும், குறைந்த விலையிலான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியதே கட்டிடத்தின் கூரைகள் இடிந்து விழுவதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறும் ஈராக் பிரதமர் முஹம்மது ஷியா அல்-சுடானி உத்தரவிட்டுள்ளார்.