டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொகுசு பங்களா மறுசீரமைப்பில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணையைத் தொடங்கி இருக்கும் சி.பி.ஐ., முதற்கட்ட விசாரணை அறிக்கையை பதிவு செய்திருக்கிறது.
டெல்லி முதல்வராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான இவருக்கு, பிளாக் ஸ்டாப் சாலையின் சிவில் லைன்ஸ் பகுதியில் அதிகாரப்பூர்வ பங்களா இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக 2015-ம் ஆண்டு பதவியேற்றதில் இருந்து, இங்குதான் வசித்து வருகிறார். 54,000 சதுர அடியில் பரந்து விரிந்த இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணிகள் 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் நடந்தன.
இதற்காக, 45 கோடி ரூபாய் அரசுப் பணம் வீணடிக்கப்பட்டதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. மேலும், இது தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், முதல் தகவல் அறிக்கைக்கு (எப்.ஐ.ஆர்.) முந்தைய, முதற்கட்ட விசாரணை அறிக்கையை பதிவு செய்திருக்கின்றனர்.
இதையடுத்து, டெண்டர் ஆவணங்கள், ஒப்பந்ததாரர்கள் சமர்ப்பித்த ஏலங்கள், கட்டடத் திட்டங்களுக்கான ஒப்புதல், நவீன சமையலறை போன்ற விலை உயர்ந்த பணிகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உத்தேச விலைப் பட்டியல் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும்படியும், ஒப்பந்ததாரருக்கு செலுத்தப்பட்ட பணப் பரிவர்த்தனைகள் குறித்த விபரங்களை வழங்கும்படியும் டெல்லி பொதுப்பணித் துறைக்கு சி.பி.ஐ. உத்தரவிட்டிருக்கிறது.