லண்டனில் உள்ள தேசிய இராணுவ அருங்காட்சியகம் முதல் உலகப் போரின்போது பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் முக்கிய பங்களிப்பை விவரிக்கும் வகையில், “பிரிட்டிஷ் இந்திய இராணுவம்: முதல் உலகப் போரின் சிப்பாய்கள்” என்கிற தலைப்பில் கண்காட்சியை அமைத்திருக்கிறது.
1914 முதல் 1918 வரை நடந்த முதல் உலகப்போரில், பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் 14 லட்சம் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இப்போரில் இந்தியர்களின் பங்களிப்பு மற்றும் வீரத்தை நினைவுகூரும் வகையில், கடந்த 2015-ம் ஆண்டு லண்டனில் முதல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதன் பிறகு, இந்தாண்டு மீண்டும் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி நவம்பர் மாதம் 2-ம் தேதிவரை நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் இந்திய இராணுவ வீரர்களின் புகைப்படங்கள், கலைப் படைப்புகள், ஆவணங்கள் மற்றும் பதக்கங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. லண்டனிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெறும் இக்கண்காட்சி யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து அமைக்கப்பட்டிருக்கிறது.
இக்கண்காட்சி குறித்து அருங்காட்சியகத்தின் தொடர்பு அதிகாரி ஜூலியன் ஃபாரன்ஸ் கூறுகையில், “ முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இந்திய வீரர்களின் பங்களிப்பு மற்றும் வீரத்தை நினைவுகூரும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இக்கண்காட்சி முதல் உலகப் போரில் இந்தியர்களின் முக்கியப் பங்கை விவரிக்கிறது. இந்தியர்களின் பங்களிப்பு இல்லாமல் எங்களால் போரை நடத்தி இருக்க முடியாது.
முதல் உலகப் போர் பற்றிய இங்கிலாந்தின் பிரபலமான நினைவகத்தில் இந்தியப் படைகளின் பங்கு கவனிக்கப்படாத ஒரு விஷயமாக இருந்தாலும், அவர்களது பங்களிப்பை இதுபோன்ற கண்காட்சிகள் மூலம் நினைவுகூர்வதை நாங்கள் வழக்கமாக வைத்திருக்கிறோம். பிரிட்டிஷ் இராணுவத்தில் பல்வேறு நாடுகள் தங்களது பங்களிப்பை அளித்திருந்தாலும், இந்திய வீரர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும்” என்றார்.