மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு, தேர்தல் வியூகங்களை வகுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பா.ஜ.க. தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும், மேற்கண்ட மாநிலங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் ஏ, பி, சி மற்றும் டி என்று தனித்தனியாக வகைப்படுத்தி இருக்கிறது.
A பிரிவில் கட்சி தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் இடங்களும், B பிரிவில் வெற்றி மற்றும் தோல்விகளின் கலவையான பதிவுகளைக் கொண்ட இடங்களும் அடங்கும். அதேசமயம், சி வகை கட்சி ஒப்பீட்டளவில் பலவீனமான நிலையில் இருப்பதாகக் கருதப்படும் இடங்களை உள்ளடக்கியது. இதற்கு நேர்மாறாக, கடந்த 3 தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இடங்கள் டி பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அடிப்படையிலேயே தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மேற்கண்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் பா.ஜ.க. இறுதி செய்து வருகிறது. இதற்காக, மத்திய தேர்தல் குழு கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் 2் கூட்டங்கள் நடந்து நிலையில், மத்தியப் பிரதேசத்தில் போட்டியிடும் 78 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் 2 கட்டமாக வெளியிடப்பட்டது. அதேபோல, சத்தீஸ்கரில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தலைநகர் டெல்லியிலுள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வரவேற்றார்.
தொடர்ந்து நடந்து கூட்டத்தில், பிரதமர் மோடி, ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், வசுந்தரா ராஜே, கஜேந்திர சிங் ஷெகாவத், பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், ராஜஸ்தானில் 60 முதல் 70 இடங்களுக்கான வேட்பாளர்கள் குறித்தும், சத்தீஸ்கரில் 31 இடங்களுக்கான வேட்பாளர்கள் குறித்தும் இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.