பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாகக் கிடைத்த பொருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன. அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஏலத்தில் 100 ரூபாய் முதல் 65 லட்சம் வரையிலான பொருட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது, அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பரிசுப் பொருட்கள் வழங்குகின்றனர். இவ்வாறு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பிரதமர் மோடி தூய்மை கங்கை திட்டத்துக்கு வழங்கி வருகிறார்.
இவ்வாறு பிரதமருக்குக் கிடைத்த பரிசுப் பொருட்கள் இதுவரை 4 முறை ஏலம் விடப்பட்ட நிலையில், 5-வது முறையாக மீண்டும் ஏலம் விடப்படுகிறது. இந்தப் பரிசுப் பொருட்களின் மின்னணு ஏலம், இன்று முதல் தொடங்குகிறது. அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஏலத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், வழக்கம்போல புனித கங்கை நதிக்கு புத்துயிர் அளிக்கும் “நமாமி கங்கை” திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். இந்த 5-வது ஏலத்தில் 100 ரூபாய் முதல் 65 லட்சம் ரூபாய் வரையிலான நினைவுப் பரிசுப் பொருட்கள் கிடைக்கும்.
மேலும், டெல்லியில் உள்ள நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்டில் இதுபோன்ற நினைவுப் பரிசுகளின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது 150-க்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க நினைவுப் பரிசுப் பொருட்களைக் கொண்டதாக இருக்கிறது. இது நாட்டின் கலாச்சார அதிர்வு பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. தாராள மனப்பான்மை, நல்லெண்ணம் மற்றும் அர்த்தமுள்ள பரிசளிப்பு கலை ஆகியவற்றை இக்கண்காட்சி வலியுறுத்துகிறது.