தமிழகத்தில், கடந்த நான்கு நாட்களில் நடைபெற்ற மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து அரியலூரில் நிகழ்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கீழப்பாவூர் அருகே வெற்றியூர் என்ற இடத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் இன்று காலையில் எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் அதே இடத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த அனைவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களில் நடைபெற்ற மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இதுவாகும். பட்டாசு ஆலைகள் தொடர்பான பாதுகாப்பு விதிகள் முழுமையாக நடைமுறைப்படுகிறதா? என அதிகாரிகள் கண்காணிக்காமல், பணத்தை வாங்கிக் கொண்டு, கண்டும் காணாமல் இருப்பதுதான் இத்தகைய விபத்துகள் அதிகரிப்பதற்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பட்டாசு ஆலை பாதுகாப்பு விதிகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி இத்தகைய விபத்துகளைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7 -ஆக உயர்ந்துள்ளது.