ஆர்.பி. கல்வி அறக்கட்டளைக்கு எதிரான பண மோசடி தடுப்புச் சட்ட ( பி.எம்.எல்.ஏ. ) வழக்கில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 8 வளாகங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால் சிங். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இவரது மனைவி காந்தா அன்டோத்ரா. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவரும், முன்னாள் வருவாய் அதிகாரியான எஸ்.ரவீந்தர் ஆகியோர் இணைந்து ஆர்.பி. அறக்கட்டளையைத் தொடங்கினார்.
இந்த அறக்கட்டளைக்காக கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதிக்கு இடையில் 329 கனல்கள் நிலத்தை வாங்கி இருக்கிறார்கள். இந்த நிலம் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து 2020-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., 2021-ம் ஆண்டு குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது.
இந்த நிலையில், ஆர்.பி. கல்வி அறக்கட்டளையின் தலைவரும், லால் சிங்கின் மனைவியுமான காந்தா அன்டோத்ரா மற்றும் முன்னாள் வருவாய் அதிகாரி ரவீந்தர் ஆகியோருக்குச் சொந்தமான ஜம்மு, கதுவா மற்றும் பஞ்சாப்பின் பதான்கோட்டில் உள்ள 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இச்சோதனை நில நன்கொடையாளர்கள், நன்கொடையாளர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பத்திரங்களை நிறைவேற்றிய சாட்சிகள் மற்றும் ஆர்.பி. கல்வி அறக்கட்டளையை செயல்படுத்த அனுமதித்ததற்காக தவறான முறையில் ஃபார்டுகளை வழங்கிய அப்போதைய பட்வாரி ஆகியோரின் இடங்களும் அடங்கும்.
இச்சோதனையில், டி.பி.எஸ். பள்ளிகள் மற்றும் பிற வணிக நடவடிக்கைகளுக்கு அதிகப்படியான நிலம் அறக்கட்டளையால் வாங்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.