திண்டுக்கல் மாவட்டம் பழநியில், சட்டவிரோதமாக மண் அள்ளியதைத் தடுத்து நிறுத்திய ஆயக்குடி விஏஓ-வை, லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன், இரமேஷ், காளிமுத்து ஆகியோர் காவல்துறை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பகுதியில் எவ்வித அனுமதியின்றி மணல் அள்ளுவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி, உதவியாளர் மகுடீஸ்வரன் மற்றும் பொதுமக்களுடன் சம்பவம் இடத்திற்குச் சென்று, மணல் அள்ளிய லாரிகளை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் ஆயக்குடி பகுதியில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்திற்கு லாரிகளை கொண்டு செல்லுமாறு வி.ஏ.ஓ கருப்பசாமி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து லாரிகளை எடுத்துக்கொண்டு ஆயக்குடி காவல் நிலையம் செல்வதற்காக லாரிகளை முன்னால் செல்ல விட்டு பின்னால் வி.ஏ.ஓ, அவருடைய உதவியாளர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென லாரிகளை வேகமாக இயக்கியும், பின்னால் கதவைத் திறந்து விட்டு மண்ணை மேலே கொட்டியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த வி.ஏ.ஓ கருப்புசாமி ஆயக்குடி காவல் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மீதும், கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு லாரியுடன் தப்பி ஓடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வி.ஏ.ஓ மற்றும் அவரது உதவியாளர் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விஏஓ மற்றும் உதவியாளரைக் கொல்ல முயன்ற புகாரில் திமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆயக்குடி விஏஓ வை வாகனம் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன், இரமேஷ், காளிமுத்து ஆகியோரை காவல்துறை கைது செய்தது.