தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், ஏராளமான பள்ளி சீருடைகள், நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக் எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என இரண்டு பேர் பணிபுரிந்து வருகிறனர்.
இங்கு புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில், பழைய கட்டடத்தை ஸ்டோர் ரூமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில், மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக் மற்றும் பள்ளிச் சீருடைகள் என மொத்தமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, ஸ்டோர் ரூம் முழுவதும் தீப்பற்றியது. தீ வேகமாக பரவி, பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள், ஸ்கூள் பேக்குகள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டபோது மாணவ, மாணவிகள் யாரும் பள்ளிக்கு வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.