நான் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், தீவிரவாதத்தை ஒழிப்பேன். குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்கள் அமெரிக்காவில் நுழைவதற்கான தடையை மீண்டும் அறிமுகம் செய்வேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
இந்த நிலையில், குடியரசு கட்சியின் யூதர்களுக்கான ஆதரவு மாநாட்டில் டிரம்ப் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது, நான் அதிபராக இருந்த போது, கடந்த 2017-ல் சிரியா, ஈரான் உட்பட குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்கள், அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்தேன். இதனால், என்னுடைய ஆட்சியின்போது, அமெரிக்காவில் எந்த ஒரு தீவிரவாத சம்பவமும் நடக்கவில்லை.
ஆனால், தற்போது எங்குப் பார்த்தாலும் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. அதனால், மீண்டும் அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், முஸ்லீம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடையை மீண்டும் விதிப்பேன். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே சண்டை நடக்கிறது. இதில் யூத இன மக்களுக்கு எதிராக, பல நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.
நான் அதிபராக இருந்திருந்தால், இந்த போர் ஏற்பட்டிருக்க விட்டிருக்க மாட்டேன். இந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு என்னுடைய முழு ஆதரவு இருக்கிறது. தற்போது நம் நாட்டின் எல்லைகளைத் திறந்து விட்டு, அதிபர் ஜோ பைடன், தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்துள்ளார். எல்லைகளை மூடுவேன். முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பேன். மூன்றாம் உலகப் போர் உருவாவதைத் தடுப்பேன் என்று கூறினார்.