பிரேசிலில் நேரிட்ட விமான விபத்தில், ஒரு குழந்தை உட்பட 14 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரேசில் நாட்டின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை, 2 பணியாளர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கியது. இவ்விமானம் ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசிலில் கடந்த 2 மாதங்களில் நடந்த 2-வது விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாநில ஆளுநர் வில்சன் லிமா வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பார்சிலோஸில் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் இறந்ததற்கு நான் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேவையான உதவிகளை வழங்குவதற்கு எங்கள் குழுக்கள் ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டு வருகின்றன. அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபமும், பிரார்த்தனையும் உரித்தாகுக” என்று தெரிவித்திருக்கிறார்.
பிரேசிலிய விமானப்படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விபத்து விசாரணை மற்றும் தடுப்பு மையத்தின் புலனாய்வாளர்கள் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து ஆளுநர் லிமா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “விமானத்தில் இருந்து உடல்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டு விட்டன. பலியானவர்கள் பிரேசில் சுற்றுலாப் பயணிகள். இப்பகுதி அதிக மழைப்பொழிவை எதிர்கொள்கிறது. தரையிறங்கும் போது எடுக்கப்பட்ட பாதையில் ஏற்பட்ட பிழையே விபத்துக்கான காரணம்” என்று கூறியிருக்கிறார்.