நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போதிய சாலை வசதிகள் இல்லை. மேலும், மாநிலத்தில் ஏராளமான ஆறுகள் ஓடுகின்றன. இதனால், பெரும்பாலும் நீர் வழிப் போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆற்றைக் கடக்க பெரிய படகுகளை பயன்படுத்துகின்றனர். இப்படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த ஆண்டு மட்டும் ஜனவரி, மே, ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஏற்பட்ட படகு விபத்துகளில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் நேரிட்ட விபத்தில் மட்டும் 103 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், மற்றொரு படகு விபத்தில் 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
நைஜீரியாவின் தாரபா மாநிலத்தில் மிகப்பெரிய பென்யூ ஆறு ஓடுகிறது. எல்லாத் தேவைகளுக்கும் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். அந்த வகையில், அர்டோகோலா மாகாணத்தின் கரீம் லாமிடோ மாவட்டத்தில் இருந்து மயோ ரனேவா கிராமத்துக்கு குழந்தைகள், வணிகர்கள் உட்பட்100-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்றது.
அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதால் நடுவழியில் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதையறிந்த உள்ளூர்வாசிகள் மற்றும் மீனவர்கள் நீரில் தத்தளித்தவர்களை மீட்க உதவினர். மேலும், தகவலறிந்து மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், 14 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது.
மேலும், 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 70-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இவர்களை மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். எனினும், இவ்வளவு நேரம் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.