மகளிர் ஆசியா சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டி : 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி.
மகளிருக்கான 7 வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா தவிா்த்து, சீனா, நடப்பு சாம்பியன் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
இதில் நேற்றையப் போட்டிகள் ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடியப் போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.
இதில் பாதிப் போட்டி வரை இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்த நிலையில் 31 வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவநீத் கவுர் ஒரு கோல் அடித்தார்.
இவரைத் தொடர்ந்து ஜப்பான் வீராங்கனை கனா உராடா 37 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அப்போது இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமமாக இருந்தது.
பின்னர் இந்திய அணியின் 47 வது நிமிடத்தில் இந்திய அணியின் சங்கீதா குமாரி ஒரு கோல் அடித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.