தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய 3 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வரத்து அதிக அளவில் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி காவல்துறையால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவி நீரில் மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டது. அருவி பகுதியில் அமைந்துள்ள இரும்பினால் ஆன காவல் கண்காணிப்பு மையம் தூக்கி வீசப்பட்டு பாதுகாப்பு கம்பிகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.
கனமழையின் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அவை ஒவ்வொன்றாக நிரம்பும் தருவாயை எட்டி வருகின்றன.