கோவையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது.
குறிப்பாக, கோவை மாநகர் பகுதிகளான ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், ரெட்பீல்டு, புலியகுளம், சுங்கம், உக்கடம், சிங்காநல்லூர், பீளமேடு, இரயில் நிலையம், இடையர்பாளையம், குனியமுத்தூர், சுந்தராபுரம் உட்பட பல்வேறு இடங்களிலும், புறநகர்ப் பகுதிகளான கணுவாய், துடியலூர், தடாகம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
மேலும், தாழ்வான குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் அவதி அடைந்தனர். அவினாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கியுள்ளது. கோவை மாநகரில் கனமழை பெய்யும் போதெல்லாம் இந்த மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கம் ஆகியுள்ளது.
பல வீடுகளில் மழைநீருடன் கலந்து கழிவுநீரும் புகுந்தது. மேலும், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினார்கள்.
மாநகராட்சியின் அலட்சியமே இதற்கு காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.