காசா போரில் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ள, ஹமாஸின் சுரங்கங்களை அளிக்க ஸ்பாஞ்ச் குண்டுகளைப் பயன்படுத்த இஸ்ரேல் இராணுவம் முடிவு செய்துள்ளது.
கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு, ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுத்துவரும் இஸ்ரேல், உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது.
ஆனால், காசாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் முழு அளவில் இன்னும் நுழையாததற்கான காரணங்களில் முக்கியமானது, ஹமாஸ் அமைத்துள்ள சுரங்கங்கள். காசாவில் ஹமாஸ் உருவாக்கி வைத்துள்ள, சுரங்கங்களில் இருந்து தீவிரவாதிகள் வெளியே வந்து எதிர்பாராத கொரில்லா தாக்குதல் நடத்தினால், தங்கள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும் என்பதே இஸ்ரேல் இராணுவத்தின் தயக்கத்துக்குக் காரணம்.
கடந்த 2021-ஆம் ஆண்டு 96 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஹமாஸின் சுரங்கங்களை அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், தங்கள் வசம் 483 கிலோ மீட்டர் அளவுக்குச் சுரங்கங்கள் இருப்பதாகவும், இஸ்ரேல் அழித்தது 5 சதவீதம் கூட இல்லை என்று கொக்கரித்தது, ஹமாஸ்.
ஹமாஸின் சுரங்கப் பாதைகளை அழிக்க, இஸ்ரேல் இராணுவம் ஸ்பாஞ்ச் குண்டுகள் எனப்படும் நவீன இரசாயன ஆயுதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
ஸ்பாஞ்ச் குண்டுகள் என்பவை வெடிபொருட்கள் அல்ல. இரு வகை இரசாயனங்கள் அடங்கிய சிறு பிளாஸ்டிக் கேன் வடிவில் இருக்கும் ஸ்பாஞ்ச் குண்டுகளை வீசியதும், அதில் இருந்து பொங்கி வரும் இரசாயன நுரை, மிகச் சில விநாடிகளுக்குள் பெரியளவுக்குப் பரவி, அந்த இடத்தையே நிரப்பி கெட்டியாகி விடும். இவற்றைச் சுரங்கத்தின் வாயில், அல்லது உள்ள பதுங்கு குழிகளில் வீசினால், அதன் வழியாக ஹமாஸ் தீவிரவாதிகள் வெளியே வந்து தாக்குதல் நடத்த முடியாது.