ரூபாய் 2000 நோட்டுகளை, காப்பீடு தபால் மூலமாக, ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பலாம். அதற்கான தொகை, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, 2000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக, ரிசர்வ் வங்கி, கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் அந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது கணக்கில் செலுத்தலாம் என, தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இது அக்டோபர் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை புழக்கத்தில் இருந்த, 97 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அக்டோபர் 8-ஆம் தேதியில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Withdrawal of ₹2000 Denomination Banknotes – Statushttps://t.co/m3lgustfL3
— ReserveBankOfIndia (@RBI) November 1, 2023
இதற்கிடையே, தொலைதூரத்தில் உள்ளவர்கள், ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்குச் செல்வதற்குச் சிரமமாக இருப்பதாகவும், மாற்று வழி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து, புதிய வசதிகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், தங்களிடம் உள்ள நோட்டுகளை, ‘இன்சூர்டு போஸ்ட்’ எனப்படும் காப்பீட்டுத் தபால் வாயிலாக, ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பலாம். அதற்கான தொகை, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
அதேபோல், டி.எல்.ஆர்., எனப்படும், ‘டிரிபிள் லாக் ரெசப்டபிள்’ எனப்படும் விண்ணப்பத்தைப் பெற்றும், உறையில் வைத்து, 2000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் உள்ள பெட்டிகளில் செலுத்தலாம். அந்தத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த இரண்டு முறைகளும் மிகவும் பாதுகாப்பானவை, அலைச்சல் இல்லாதவை என்று கூறப்பட்டுள்ளது.