டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்கள் தான் காரணம் என உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவில் இருந்ததால், வெள்ளிக்கிழமை தொடர்ந்து புகை மூட்டத்தில் மூழ்கியது. இதனையடுத்து இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பஞ்சாப், ஹரியானா, உ.பி., டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
டெல்லி செல்லும் வழியில் காஜியாபாத்தில் தரையிறங்கியதாகவும், விமானத்தை விட்டு இறங்கியவுடன் கண்கள் எரிய ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.
அது புகை மூட்டத்தால் ஏற்பட்டதை உணர்ந்ததாகவும், நாசாவின் செயற்கைக்கோள் படங்களை சோதித்தபோது, விவசாய பயிர்கள் எரிப்பு மற்றும் தொழில்துறை மாசுபாட்டால் உருவானதை தெரிந்து கொள்ள முடிந்ததாகவும் கூறினார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பெயர் ‘சிவப்பு’ நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த மாநிலங்களில் இருந்து தான் டெல்லிக்கு காற்று மாசு பரவியுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.