உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக வலம் வரும் முகேஷ் அம்பானிக்கு, இ மெயில் மூலம் தொடர் கொலை மிரட்டல் விடுத்த தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி. பிரபல தொழிலதிபரான இவர், உலக கோடீஸ்வரர்களில் ஒருவராகவும், இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராகவும் வலம் வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபரிடமிருந்து இ மெயில் வந்தது. அந்த இ மெயிலில், “எனக்கு 20 கோடி ரூபாய் தர வேண்டும். தவறினால் சுட்டு கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடுபவர்கள் இருக்கிறார்கள்” என்று கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
இதுகுறித்து தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீஸில் புகார் செய்தார். இதன்பேரில் மும்பை காம்தேவி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, முகேஷ் அம்பானிக்கு மீண்டும் இ மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
அந்த மெயிலில் “நான் 20 கோடி ரூபாய்தான் கேட்டேன். ஆனால், நீங்கள் எனக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே, தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளேன். நீங்கள் எனக்கு இனி 200 கோடி ரூபாய் தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறியிருந்தார். இதுகுறித்தும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, மூன்றாவதாக 400 கோடி ரூபாய் கேட்டு மீண்டும் இ மெயில் வந்தது. இதைத் தொடர்ந்து மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதேபோல, மும்பை காம்தேவி காவல் நிலைய போலீஸாரும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில், முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெலங்கானாவைச் சேர்ந்த 19 வயது இளைஞரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில், தொடர்ந்து 5 முறை முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 8-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த நபர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.