ஆதித்யா எல்-1 மற்றும் ககன்யான் பயணங்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் உதவும். இதன் மூலம் இந்தியா தன்னிடம் மன உறுதியும், ஆற்றலும் இருப்பதை நிரூபித்திருக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியிருக்கிறார்.
இந்திய ஏரோநாட்டிக்கல் சொசைட்டி (ஏ.இ.எஸ்.ஐ.) சார்பில் புதுடெல்லியில் உள்ள யசோபூமி மாநாட்டு மையத்தில் 2047-ம் ஆண்டில் வான்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து (‘ஏரோஸ்பேஸ் & ஏவியேஷன் 2047’) என்கிற தலைப்பில் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு மாநாடு மற்றும் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “ஆதித்யா எல்-1 மற்றும் ககன்யான் பயணங்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் உதவும். இதன் மூலம் இந்தியா தன்னிடம் மன உறுதியும், ஆற்றலும் இருப்பதை நிரூபித்திருக்கிறது.
நாடு சிறந்த முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இன்னும் பல சவால்கள் நம்மிடம் உள்ளன. பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும், வான் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துக்காகவும் வேகம் மற்றும் ஓடுபாதை சுயாதீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலம் விண்வெளித் துறை ஒரு உருமாற்றக் கட்டத்திற்கு உட்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் இப்பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு விண்வெளித் துறையில் மனித வளங்களை மேம்படுத்துதல் மற்றும் மீள்திறன் பெறுதல் அவசியம்” என்றார்.
இந்திய ஏரோநாட்டிக்கல் சொசைட்டியின் 75 ஆண்டுகாலப் பணிகளை நினைவுகூரும் வகையில் இந்த மாநாடு மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் இந்தியாவில் 75 ஆண்டுகால வான்வெளி மற்றும் விமானப்போக்குவரத்து முன்னேற்றங்கள் குறித்த தொகுப்பு மற்றும் தொலைநோக்கு ஆவணம் வெளியிடப்பட்டது. மேலும், 2047-ம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கு தொடர்பான தொலைநோக்கு ஆவணமும் வெளியிடப்பட்டது.
இம்மாநாட்டில் சர்வதேச வல்லுநர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் என 1,500–க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கண்காட்சியில் 75-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உட்பட சுமார் 200 தொழிற்சாலைகள் மற்றும் குறு சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களது உள்நாட்டு திறன்களை வெளிப்படுத்தின.
நாட்டில் வான்வெளி மற்றும் விமானப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக 1948-ம் ஆண்டில் பிரதமரை புரவலராகக் கொண்டு இந்திய ஏரோநாட்டிக்கல் சொசைட்டி (ஏ.இ.எஸ்.ஐ.) நிறுவப்பட்டது. தொழில்துறையினர், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடையே விமானப்பொறியியலை ஊக்குவிப்பதே இச்சங்கத்தின் நோக்கமாகும்.
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், டாக்டர் சதீஷ் தவான், டாக்டர் வி.எஸ்.அருணாசலம், டாக்டர் வி.கே.சரஸ்வத் போன்ற தலைசிறந்த விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்களைத் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் கொண்டு ஏ.இ.எஸ்.ஐ செயல்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் வான்வெளி, விமானத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு ஊக்க சக்தியாக இருந்து வருகிறது,