காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆறுகளில், மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு குறித்து, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி நதி பாயும், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
இதில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மாதவப்பெருமாள் கோவில், தாளக்குடி, நொச்சியம், கொண்டையம்பேட்டை பகுதியில் மணல் குவாரிகளில் அரசு அனுமதித்த டோக்கனை விட அதிக லாரிகளில் மணல் அள்ளுவதாகப் புகார் எழுந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் வந்து, கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 3 அடிக்குப் பதில் 10 அடிக்கு மேல் மணல் அள்ளியுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதேபோல, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினருடன் கரூர் மாவட்டத்தில், நன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனிடையே, உதவி பொறியாளர் சாதிக் பாஷா, இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் உதவியாளர் சத்யராஜ் ஆகிய 3 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
குறிப்பாக, எப்போது, மேல் விசாரணைக்கு அழைத்தாலும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும் என நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், காவிரி மற்றும் வைகை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆறுகளில், மணல் குவாரிகளில் நடைபெற்ற மோசடி குறித்து, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் நேரில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.