தமிழகத்தில் காவிரி, வைகை, பாலாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
இதில், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் அரசு அனுமதித்த டோக்கனை விட அதிக லாரிகளில் மணல் அள்ளுவதாகப் புகார் எழுந்தது.
இதனால், கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் வந்து, காவிரி கரையில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 3 அடிக்குப் பதில் 10 அடிக்கு மேல் மணல் அள்ளியுள்ளது ஆய்வில் தெரிய வந்தது.
இதேபோல, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கருர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதனிடையே, உதவி பொறியாளர் சாதிக் பாஷா, இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் உதவியாளர் சத்யராஜ் ஆகிய 3 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், நிபந்தனையுடன் விடுவித்தனர்.
இதனிடையே, காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆறுகளில், மணல் குவாரிகளில் நடைபெற்ற மோசடி குறித்து, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் நேரில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறையின் முதன்மை செயற்பொறியாளர் முத்தையா, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்.
சம்மன் அனுப்பியதன் அடிப்படையில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறையின் முதன்மை செயற்பொறியாளர் முத்தையா நேரில் ஆஜராரகி விளக்கம் அளித்து வருகிறார்.
அவரது இந்த வாக்குமூலம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.