ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி கழக நிதியில் ரூ.371 கோடி ஊழல் செய்துள்ளதாக அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 16 மாதங்கள் கழித்து சந்திரபாபு நாயுடு மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 9 -ம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி நாயுடு தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனிடையே, சந்திரபாபு நாயுடுவின் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. 53 நாட்களாகச் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்குக் கடந்த 31 -ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
அதாவது, வரும் 24 -ம் தேதி ராஜமுந்திரி சிறை கண்காணிப்பாளர் முன்பு சந்திரபாபு நாயுடு சரணடைய வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இதனிடையே, ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை பாதிப்புகள் குறித்த விவரங்களை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில், மனுவை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.