ஜார்க்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதாக எழுந்த புகார் தொடர்பாக, முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மீது சி.பி.ஐ. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருக்கும் ஹேமந்தி சோரனே, கனிம வளத்துறையையும் கைவசம் வைத்திருக்கிறார்.
அந்த வகையில், ஹேமந்த் சோரன் தனது உதவியாளர் பங்கஜ் மிஸ்ராவுக்கு சாஹேப்கஞ்ச்சில் சட்ட விரோதமாக சுரங்கம் ஒப்பந்தம் வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக புகார் எழுந்தது. மேலும், மேற்கண்ட சுரங்கத்தில் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதாகவும், இதனால் கிராமப்புறங்களில் இருக்கும் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது சாஹேப்கஞ்ச் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், நில மோசடி மற்றும் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இதனிடையே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மேற்கண்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ.யின் ராஞ்சி பிரிவு, முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா, பவித்ரா குமார் யாதவ், ராஜேஷ் யாதவ், சஞ்சய் குமார் யாதவ், பச்சு யாதவ், சஞ்சய் யாதவ் மற்றும் சுவேஷ் மண்டல் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறது.