வந்தே பாரத் இரயில் மீது கல்வீசிய இரண்டு போதை ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடெங்கும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் இரயிலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
வந்தே பாரத் இரயில்கள் மீது சில சமூக விரோதிகள் கல்வீசும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிறு மாலை ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, மேராமண்டலி மற்றும் புதாபங்க் நகருக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் இரயில் மீது கற்களை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் இரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.
இதுகுறித்து பணியிலிருந்த இரயில்வே காவலர் உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி பாதுகாப்பு ஆணையாளர் சம்பவ இடத்திற்குச் சென்றார்.
இதை அடுத்து இரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் இரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றப் புலனாய்வு பிரிவினர் இணைந்து நேற்று மாலை குர்தா சாலை பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, இரயில் தண்டவாளம் அருகே பதுங்கி இருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணை செய்ததில், அவர்கள் இரயில் மீது கல் வீசியது தெரியவந்தது.
அவர்கள் மது அருந்திய போது, விளையாட்டுக்காக இரயில் மீது கல்வீசியதாக ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, அவர்களை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.