இந்திய அணியுடனான தனது பயணத்தை தொடர்வது தொடர்பாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி தான் விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற அசைக்க முடியாத அணியாக திகழ்ந்தது.
இந்த முறை உலகக்கோப்பையை இந்தியா தான் வெல்லும் என்று பலரும் கனவோடு இருந்தபோது இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் பலரும் ரோஹித் சர்மா அணியில் இருந்து விலகப்போகிறார், விராட் கோலி அணியில் இருந்து விலகப்போகிறார், ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதிவிலிருந்து விலகப்போகிறார் என்ற புரளியை கிளப்பி வந்தனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் அவரது குழுவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இந்திய அணியுடனான தனது பயணத்தை நீட்டிப்பது தொடர்பாக இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “அதிகாரப்பூர்வமாக நான் பயிற்சியாளராக தொடரப்போகிறேன் என்று அறிவிக்கப்பட்டது, ஆனாலும் நான் இதுவரை எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. பி.சி.சி.ஐ.-இடம் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆவணங்கள் வரட்டும்,” என்று தெரிவித்துள்ளார்.