இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி-2023ல் வரலாற்று நிகழ்வாக ரூ.15.03 கோடி மதிப்பிலான கதர் மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 2023 நவம்பர் 14 முதல் 27 வரை நடைபெற்ற 42-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி – 2023 ல் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பங்கேற்றது.
14 நாட்கள் நடைபெற்ற இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சியில், கதர் ஆடை விரும்புவோர் அரங்கு எண் 3 -ல் அமைக்கப்பட்ட ‘கதர் அரங்கில்’ பெருமளவில் கொள்முதல் செய்தனர். கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்கள் இதுவரை இல்லாத வரலாற்று நிகழ்வாக ரூ.15.03 கோடி அளவிற்கு விற்பனையாகி உள்ளது.
2022-ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை ரூ.12.06 கோடியாக இருந்தது, இது இந்த ஆண்டு 25 சதவீதம் அதிகரித்து ரூ.15.03 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த அளவிற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ‘புதிய இந்தியாவின் புதிய கதர்’ தற்சார்பு இந்தியா இயக்கத்தை வழிநடத்துகிறது என்பதைக் காட்டுகிறது என்று கதர் மற்றும் கிராம தொழில் ஆணைய தலைவர் மனோஜ் குமார் கூறினார். கதர் அரங்கிற்கு இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சிறப்பு பாராட்டுப் பதக்கத்தையும் விருதையும் வழங்கியது.
நவம்பர் 27 அன்று கதர் இந்தியா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நிறைவு விழாவில், இந்த ஆண்டு விற்பனையின் அடிப்படையில் பங்கேற்பாளர்களுக்கு முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளை குமார் வழங்கினார்.
4,408,870 மதிப்புள்ள கதர் பொருட்கள் விற்பனையான கர்நாடகத்தைச் சேர்ந்த டி.என்.ஆர் சில்க் கதர் முதல் பரிசைப் பெற்றது. 3,076,600 மதிப்புள்ள கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களை விற்பனை செய்த கர்நாடகாவின் நஸ்னீன் சில்க் கதர் இண்டஸ்ட்ரீஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கர்நாடகாவின் ஷிரின் பட்டு கதர் கிராமத் தொழில்கள் சங்கம் ரூ .2,253,570 விற்பனையுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுதவிர விற்பனை அடிப்படையில் 10 அரங்குகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.