இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நேற்று ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர். முதல் ஓவரில் இந்திய அணி தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக விளையாடியது. சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 6 வது ஓவரில் 6 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 28 பந்துகளில் 37 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய ரிங்கு சிங் நிதானமாக விளையாடி வந்தார். இவருடன் விளையாடி வந்த ருத்ராஜ் 28 பந்துகளில் 32 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து ஜித்தேஷ் சர்மா களமிறங்கினார். ஜித்தேஷ் மற்றும் ரிங்கு சிங் கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தது. இறுதியாக ஜித்தேஷ் சர்மா 1 பௌண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 19 பந்துகளில் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
ரிங்கு சிங் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 29 பந்துகளில் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.
ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக பேன் ட்வர்ஷுய்ஸ் 3 விக்கெட்களும், ஜசோன் மற்றும் தன்வீர் தலா 2 விக்கெட்களும் ஆரோன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோஷ் களமிறங்கினர்.
4 வது ஓவரில் ஜோஷ் 8 ரன்களுக்கும் 5 வது ஓவரில் டிராவிஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய ஆரோன் 8 ரன்களுக்கும் டெர்மோட் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 36 ரன்களும், மேட் ஷாட் 22 ரன்களும் எடுத்தனர்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அக்சார் படேல் 3 விக்கெட்டும், தீபக் 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்களை வீழ்த்திய அக்சார் படேலுக்கு வழங்கப்பட்டது.