நாட்டின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால், பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அழுதபடியே வடகொரிய அதிபர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வடகொரியாவைப் பொறுத்தவரை, உலகில் மர்மமான நாடாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அந்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மற்றவர்களுக்குத் தெரியாது. மேலும், அந்நாட்டில் கடுமையான மற்றும் வித்தியாசமான சட்ட விதிகள் கையாளப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, அந்நாட்டை அதிபர் கிம் ஜாங் உன் சர்வாதிகாரி போல ஆட்சி செய்து வருகிறார். இந்நாடு மிகச்சிறியது என்பதால், வடகொரியாவின் மொத்த மக்கள் தொகையை வெறும் 2.6 கோடி மட்டும்தான் என்று கூறப்படுகிறது. அதோடு, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவாக தகவல்கள் வெளியாகின்றன.
இந்த நிலையில்தான், தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சியில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டிலுள்ள பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறி, மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.
அந்த வீடியோவில் பேசும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் நம் நாட்டை பாதுகாக்கும்.
பிறப்பு விகிதம் குறைவதைத் தடுப்பதோடு, குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்க வேண்டும். இதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இப்படிப் பேசும்போது கண்கலங்கிய அவர், தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து கண்ணீரை துடைத்துக் கொண்டார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 1990-ம் ஆண்டு வடகொரியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு ஏராளமானோர் பலியானார்கள். இதன் பிறகு, வடகொரியாவின் மக்கள்தொகை சரியத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.