சென்னை மணலி அருகே உள்ள தனியார் ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை மணலி அருகே உள்ள ஆண்டார் குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான இரசாயன சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனின் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவியது. குடோனில் தங்கியிருந்த ஊழியர்கள், குடோனில் தீ பற்றியதைப் பார்த்ததுமே, அலறியடித்து வெளியே ஓடினர்.
இதுகுறித்து ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மணலி, எண்ணூர், திருவொற்றியூர், மீஞ்சூர், தண்டையார்பேட்டை, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில், 80-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் பல மணி நேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். டையர் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதால், தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர்.
இதை அடுத்து, இராட்சத தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மீண்டும் தீயை அணைக்க வீரர்கள் முயன்றபோது, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை அடுத்து, மெட்ரோ லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தீயைக் கட்டுக்குள் கொண்டுவர வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் பல இலட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.