இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள டிவொலி பகுதியில் சான் ஜியோவானி எவாஞ்சலிஸ்டா (San Giovanni Evangelista) மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மருத்துவமனையின் பிணவறை அருகே பற்றிய தீ மற்ற இடங்களுக்கும் மளமளவென பரவியது. இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மீட்புக் குழுவினர் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர். சுமார் 200 நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவரச சிகிச்சை பிரிவிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நான்கு பேரில் இருவர் மூச்சுத் திணறலால் இறந்ததாகவும், ஒருவர் மாரடைப்பால் இறந்ததாகவும், ஒருவர் தீக்காயங்களால் இறந்ததாகவும் கூறப்படுகிறது. பலர் படுகாயமடைந்துள்ளனர். பிணவறையில் வைக்கப்பட்டிருந்த பிணங்களும் எரிந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சில இரசாயனங்களால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.