அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பழங்குடி முஸ்லீம் மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்புக்கு, மாநில அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கிறது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் மக்கள்தொகையில் 34 சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லீம்களைக் கொண்டுள்ளனர். இது ஜம்மு காஷ்மீர் மற்றும் லட்சத்தீவுகளுக்கு அடுத்ததாக அனைத்து யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் 3-வது இடமாகும்.
மேலும், மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையான 31 மில்லியனில், 10 மில்லியனுக்கும் அதிகமானோர் முஸ்லீம்கள். எனினும், சுமார் 4 மில்லியன் மக்கள் மட்டுமே அஸ்ஸாமி மொழி பேசும் பூர்வீக முஸ்லிம்கள். மீதமுள்ளவர்கள் வங்காள மொழி பேசும் புலம்பெயர்ந்தோர். அதாவது, வங்காளதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
இந்த சூழலில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மா தலைமையிலான அரசாங்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் பழங்குடி முஸ்லீம் சமூகங்களின் சமூக பொருளாதார மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான திட்டங்களை அறிவித்தது.
இது தொடர்பாக, ஹிமந்தா பிஸ்வாஸ் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இந்த கணக்கெடுப்பு மாநிலத்தின் பழங்குடி சிறுபான்மையினரின் விரிவான சமூக அரசியல் மற்றும் கல்வி மேம்பாட்டை இலக்காகக் கொண்ட பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு வழிகாட்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
கோரியா, மோரியா, ஜோலா (தேயிலை தோட்டங்களில் வசிப்பவர்கள் உட்பட), மற்றும் தேசி, சையத் (அஸ்ஸாமி மொழி பேசும்) சமூகங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில அரசால் பூர்வீக அஸ்ஸாமிய முஸ்லீம்களாக வகைப்படுத்தப்பட்டன. அஸ்ஸாம் முஸ்லீம்கள் பழைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்தோ அல்லது தற்போதைய வங்காளதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்த வரலாறு இல்லை.
முன்னதாக, மாநில அரசால் அமைக்கப்பட்ட 7 துணைக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் 5 துணைக் குழுக்களை பழங்குடியினராக அடையாளம் காணும் முடிவை அரசு எடுத்தது குறிப்பிடத்தக்கது.