ஒரே நாடு ஒரே சட்டம்- பிரிவினை பேசுவோருக்கு உச்ச நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, எல். முருகன் விடுத்துள்ள X பதிவில், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கிய மத்திய அரசின் முடிவு செல்லும் என இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
ஜம்மு- காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு அதற்கென்று தனி இறையாண்மை கிடையாது என்றும், மத்திய அரசு எடுக்கும் முடிவு சட்டத்திற்குட்பட்டது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரை நிர்வாக வசதிக்காக இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், சிறப்பு அதிகாரமான 370-யை ரத்து செய்ததன் மூலம் மிகப்பெரிய புரட்சியை பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னெடுத்தது.
நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் சக்திகள் 370-வது பிரிவு ரத்துக்கு எதிராக குரல் கொடுத்தனர்,
ஆனால் நாட்டின் உச்சபட்ச அதிகாரமான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கொடுத்துள்ள தீர்ப்பு பொய் பரப்புரைக்கு சவுக்கடியாக அமைந்திருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.