காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வட அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு இந்தியா மெமொ அனுப்பியதாக வெளியான செய்தியை வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.
கடந்த ஜூன் 18ஆம் தேதி கனடாவின் சர்ரே நகரில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் கொலையின் பின்னணியில் இந்தியா உள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் எழுந்தது
இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு வட அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு இந்தியா மெமொ அனுப்பியதாக செய்திகள் வெளியானது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பாக்சி, இந்த குற்றச்சாட்டு இந்தியாவிற்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி என தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.