முஸ்லீம்களும், மற்ற பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் அனைத்து சர்ச்சைக்குரிய மத இடங்களையும் தானாக முன்வந்து இந்து சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்சி தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இந்திரேஷ் குமார் அளித்திருக்கும் பேட்டியில், “வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் இந்து சனாதனிகளுக்குச் சொந்தமான கோவில்களை அழித்திருக்கிறார்கள். ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத், ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைக் காண வேண்டிய அவசியமில்லை என்று கூறியது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
பகவத்தின் அறிக்கை பரஸ்பர மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்டது. இதனால் சமூகம் வெறுப்பு மற்றும் வன்முறையிலிருந்து விடுபட்டவும், சிந்திக்கவும் முடியும். உண்மையிலேயே கோவில்களை தேட வேண்டிய அவசியம் இல்லை, உண்மை அனைவருக்கும் முன்னால் இருக்கிறது. அந்த உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லீம்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் தாமாக முன்வந்து சர்ச்சைக்குரிய மத இடங்களை இந்து சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டதில் நம் நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கியுள்ளது. இராமர் கோவில் அனைவருக்கும் பொதுவானது. அயோத்தி இராமர் கோவில் ஒரு தேசியக் கோவில். இராமர் அனைவருக்கும் பொதுவானவர். இந்தியா அனைத்து மதங்களையும் ஏற்று மதிக்கும் தேசம். எனவே, இராமர் கோவிலை தேசியக் கோயில் என்று அழைப்பதே சரியானது” என்றார்.
அயோத்தியில் இராமர் கோவில் தொடர்பாக பல ஆண்டுகளாக நிலவி வந்த சர்ச்சை, கடந்த 2020-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தற்போது அங்கிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல, வாரணாசியில் ஞானவாபி மசூதி தொடர்பாக தற்போது சர்ச்சை நிலவி வருகிறது. மேலும், மதுராவிலுள்ள ஷாஹி ஈத்கா மசூதி தொடர்பாகவும் சர்ச்சை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.