மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யகுமார் யாதவ் தனது சமூக வலைத்தளத்தில் இதயம் நொறுங்கிய எமோஜியை பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தற்போது எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு போட்டி என்றால் அது ஐபிஎல் என்றே சொல்லலாம். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னர் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வந்தது முதலே அவரை கேப்டனாக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற சர்ச்சை பரவலாக வந்துகொண்டே இருந்தது.
இந்த நிலையில், நேற்று அதிகாரபூர்வமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா என்று அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாகவே கேப்டன்சி மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் எதிர்பாராத நேரத்தில் அறிவிப்பு வெளியானது.
அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் கேப்டனுக்கான ரேஸில் பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரும் இருந்தனர். ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவின் வருகையின் போது, பும்ரா தனது சமூக வலைத்தளம் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது சூர்யகுமார் யாதவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், இதயம் நொறுங்குவது போன்ற எமோஜியை பதிவிட்டு அதிருப்தையை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.
மும்பை அணியால் சூர்யகுமார் யாதவ் வாங்கப்பட்டதற்கு ரோகித் சர்மாவே முதன்மை காரணம். கேகேஆர் அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி இருந்தாலும், உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடியப் போதே சூர்யகுமார் யாதவின் திறமையை ரோகித் சர்மா அறிந்து வைத்திருந்தார். இதுகுறித்து 2011ஆம் ஆண்டிலேயே ரோகித் சர்மா தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருப்பார்.
அதன்பின் சூர்யகுமார் யாதவை மும்பை அணியில் கொண்டு வந்து வாய்ப்பு வழங்கியதோடு, அவருக்கு இந்திய அணியில் நிரந்தர வீரராக மாற்றியதிலும் ரோகித் சர்மாவின் பங்கு அதிகம். இதனால் தனது கேப்டனுக்காக சூர்யகுமார் யாதவ் ஓபனாக பேசியிருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது. அதேபோல் கேப்டன்சி மாற்றம் குறித்து சக வீரர்களுக்கு கூட மும்பை அணி நிர்வாகம் ஆலோசிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.