லிபியா கடல் பகுதியில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 60-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மாயமாகி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்திருக்கிறது.
படகு விபத்துகள் அதிகமாக நடக்கும் நாடாக லிபியா விளங்குகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை, இஸ்லாமிய நாடுகளில் நிலவும் அரசியல் சூழல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் காரணமாக, அந்நாடுகளில் வசிக்கும் மக்கள் ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளில் குடியேறும் எண்ணத்துடன் சட்டவிரோதமாக படகுகளில் இடம்பெயர்ந்து செல்கின்றனர்.
குறிப்பாக, எத்தியோப்பியா, எரித்திரியா, நைஜீரியா, காம்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு சட்டவிரோதமாக புலம்பெயர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் இத்தாலி வழியாக கடல் மார்க்கமாக ஐரோப்பாவை அடைவதற்கு லிபியா மற்றும் துனிசியா ஆகியவைதான் புறப்படும் முக்கியப் பகுதிகளாக இருக்கின்றன.
ஆனால், மோசமான படகுகள், அதிக அளவிலான பயணிகள் எண்ணிக்கை மற்றும் வானிலை காரணமாக படகுகள் கடலில் மூழ்கி விடுகின்றன. அந்த வகையில், லிபியா கடல் பகுதியில் நடந்த படகு விபத்துகளுக்கு கணக்கு வழக்கே இல்லை. 2014-ம் ஆண்டு நடந்த படகு விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதுதான் மிகப்பெரிய படகு விபத்தாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், லிபியாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள ஜுவாராவிலிருந்து 86 புலம்பெயர் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஐரோப்பாவை நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. இப்படக்கில் காம்பியா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இந்தப் படகு பாரம் தாங்காமல் திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்த லிபியா கடற்படை விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. இதில், 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அந்நாட்டின் தடுப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதேசமயம், மீதமுள்ள 61 பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. இவர்களது உடல்களும் கரை ஒதுங்கவில்லை. எனினும், மேற்கண்ட 61 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்திருக்கிறது.