மாணவர்கள் தங்களது முன்னேற்றத்தில் மட்டுமன்றி, மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 6 நாள் பயணமாக மேற்குவங்கம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்று மேற்குவங்க மாநிலம் காரக்பூர் ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
இதையடுத்து, இன்று தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ஐதராபாத் பப்ளிக் பள்ளியின் நூற்றாண்டு விழா கலந்துகொண்டார். அப்போது பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, “மைக்ரோசாப்ட் சி.இ.ஐ. சத்யா நாதெல்லா போன்ற சிறந்த முன்னாள் மாணவர்களை உருவாக்கியதற்காக ஐதராபாத் பப்ளிக் பள்ளியை பாராட்டுகிறேன்.
ஐதராபாத் பப்ளிக் பள்ளி, மாணவர்களை பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வைக்கிறது. இது மாணவர்களிடையே விமர்சன சிந்தனையை ஊக்குவிப்பதற்கு ஊக்கமளிக்கிறது என்பதை அறியும்போது மகிழ்ச்சியளிக்கிறது.
மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியாக மட்டும் திறமையாக இருந்தால் போதாது. உணர்வு ரீதியாகவும் திறமையாக இருக்க வேண்டும். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் வளர்க்கப்பட வேண்டும்.
இதற்கு ஆசிரியர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். அதேசமயம், மாணவர்களும் தங்களது முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
முன்னதாக, தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “மாணவர்கள் விளையாட்டில் ஊக்குவிக்கப்பட வேண்டும். வகுப்பறைக்கு வெளியேயும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை நினைவு கூர விரும்புகிறேன். புதிய தேசிய கல்விக் கொள்கையின் உண்மையான உணர்விற்கு ஐதராபாத் பப்ளிக் பள்ளி உரிய முக்கியத்துவம் அளிக்கிறது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தனாசாரி அனசுயா, கல்வித்துறை செயலாளர் புர்ரா வெங்கடேசன், ஐதராபாத் பப்ளிக் பள்ளி சொசைட்டி தலைவர் குஸ்தி ஜெ நோரியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல, பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.