5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த விரக்தியில், பிரதமர் மோடியை எதிர்கட்சியினர் அவமதித்து வருகின்றனர் என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. மிசோராமில் மாநில கட்சியான சோரம் மக்கள் இயக்கம் வெற்றிபெற்றது.
அதேசமயம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை பறித்திருக்கிறது. இது இண்டி கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழலில், தேர்தல் முடிவு வெளியான மறுநாளே நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி விட்டது. இதனால், எந்த விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடலாம் என்று எதிர்கட்சிகள் காத்திருந்த நிலையில், பாதுகாப்பு மீறல் சம்பவம் அரங்கேறியது.
இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தை வைத்து இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும், இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் மீது குற்றம்சாட்டின. இதனால், இரு அவைகளிலும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று மத்திய அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்திவாறும், பிரதமர் மோடியின் போட்டோவை வைத்துக்கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில்தான் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக எதிர்கட்சியினர் பிரதமர் மோடியை அவமதித்து வருவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சனம் செய்திருக்கிறார்.
இது தொடர்பாக, பிரஹலாத் ஜோஷி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இதனால் எதிர்கட்சியினர் விரக்தியடைந்து இருக்கின்றனர்.
இது எதிர்கட்சியினரின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. இதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். மோசமான முகமூடியை அணிந்து பிரதமர் மோடியை அவமதிப்பு செய்கின்றனர். எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரதமரின் மார்பிங் செய்யப்பட்ட போட்டோவை பயன்படுத்துகின்றனர்.
எதிர்கட்சியினரின் இந்த செயல்களை ஒட்டுமொத்த அவையும் கண்டித்திருக்கிறது. பிரதமரை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.