டெல்லியில் உள்ள குடிசைவாசிகள், கடைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளன் பாதுகாப்பை 2026 டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்க, தேசிய தலைநகர் பிரதேச சட்டங்கள் (சிறப்பு விதிகள்) 2-வது திருத்தம் மசோதா 2023 நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அப்போது, டெல்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் 40 லட்சம் மக்களை மனிதாபிமானமற்ற உத்தரவுகளிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் பூரி மக்களவையில் தெரிவித்தார்.
டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, டெல்லி மாநகராட்சி 2006-ம் ஆண்டு நகரில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு எதிராக சீல் வைக்கும் பணியைத் தொடங்கியது. ஆனால், இது அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே, அப்போதைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், ஒரு வருட காலத்திற்கு சில வகையான அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைப் பாதுகாக்க டெல்லி சட்டங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 2006-ஐ இயற்றியது.
இதன் பிறகு, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் மூலம் 2011 வரை பாதுகாப்புகள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வந்தன. 2011-ம் ஆண்டில், டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச சட்டங்கள் (சிறப்பு விதிகள்) 2-வது சட்டம் நடைமுறைக்கு வந்தது. இது 2014 டிசம்பர் 31-ம் தேி வரை 3 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அளித்தது.
இந்த சூழலில், தற்போது திருத்தம் 2023 மேலும் 3 ஆண்டுகளுக்கு பாதுகாப்புகளை நீட்டிக்கிறது. 2014 ஜூன் 1 வரையிலான அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் இதில் அடங்கும்.