பிரதமரின் ஆவாஸ் யோஜனா நகர்ப்புற திட்டங்களின் கீழ், 1.19 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 78 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த சூழலில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “குடிசைவாசிகள் உட்பட நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து தகுதியுள்ள குடும்பங்களுக்கும், பயனாளிகளுக்கும் வீடுகள் கட்டுவதற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி செய்கிறது.
2023 டிசம்பர் 4-ம் தேதி நிலவரப்படி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா நகர்ப்புறத் திட்டத்தின் கீழ், 1.19 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இதில், இதுவரை 78 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 85,066 கோடி ரூபாய் மத்திய உதவியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி மற்றும் கொல்கத்தாவில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்த 2 நகரங்களிலும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்த, டெல்லி மற்றும் மேற்குவங்க முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்க சபாநாயகர் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்” என்றார்.
அதேபோல, பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மத்திய அரசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகள் ஏற்கவில்லை என்று விமர்சித்தார்.