2023 சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றதோடு கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
2023 சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது.
இப்போட்டியில் மொத்தமாக 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துக் கொண்டனர். இந்தியாவின் தலைசிறந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்களான டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி போன்ற வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
மேலும், சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே, மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் பங்குபெற்றனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 7 சுற்றுகளின் முடிவில் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து 7வது மற்றும் இறுதிச்சுற்று ஆட்டத்தில் டைபிரேக்கர் முறையில் குகேஷ் வெற்றி பெற்றார். சாம்பியன் பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்றதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார்.