துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன் தென் அமெரிக்க நாடான நிகராகுவாவுக்கு சென்று கொண்டிருந்த விமானம் கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. மனித ஆள் கடத்தல் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விமானம் புறப்பட பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
துபாயிலிருந்து 303 இந்தியப் பயணிகளுடன், மத்திய அமெரிக்காவில் உள்ள நிகராகுவ நாட்டிற்கு ஏர்பஸ் ஏ340 பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நிகராகுவ நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு சென்று கொண்டிருந்தது.
பிரான்ஸ் எல்லைப்பகுதியில் பறந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறக்க அனுமதி கிடைத்ததும், கிழக்கு பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் வந்த பயணிகளிடம் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விமானத்தில் மனித கடத்தல் நடந்திருக்கலாம் என்று பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
இதனால் பிரான்ஸ் அதிகாரிகள் உடனடியாக விமானத்தை மீண்டும் பறக்க விடாமல் தடுத்து, இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பிரான்ஸ் அதிகாரிகள் இந்திய தூதரகத்திற்குத் தகவல் கொடுத்தனர். இந்தியத் தூதரக அதிகாரிகள் அங்கு சென்று இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை செய்தனர்.
இது தொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் விமானத்தில் பயணித்த அனைவரும் உரிய அனுமதியுடன் பயணித்ததும், மனித கடத்தலில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விமானம் மீண்டும் புறப்பட அனுமதி வழங்கி நேற்று பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 303 இந்தியர்களுடன் விமானம் இன்று பிரான்சில் இருந்து நிக்கராகுவா நாட்டிற்கு புறப்படுகிறது.