ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியிலிருந்து இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் வந்தனா விலகியுள்ளார்.
2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. இதில் மகளிர் ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று வரும் ஜனவரி 13 முதல் 19ஆம் தேதி வரை ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இதில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘பி’பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இத்தாலி, அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக் குடியரசு ஆகிய அணிகள் உள்ளன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜனவரி 13ஆம் தேதி அமெரிக்காவுடன் விளையாடுகிறது. 14ஆம் தேதி நியூஸிலாந்துடனும், 16ஆம் தேதி இத்தாலியுடனும் விளையாடவுள்ளது.
முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். இதனால் இந்திய மகளிர் அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
ராஞ்சியில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது இந்திய அணியின் துணை கேப்டன் வந்தனா அணியிலிருந்து விலகியுள்ளார். எதிர்பாராதவிதமாக முன்கள வீராங்கனையான வந்தனா கட்டாரியாவுக்கு பயிற்சியின் போது எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் இருந்து விலகி விலகியுள்ளார்.
அனுபவம் வாய்ந்த அவரது விலகல் இந்திய அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவருக்குப் பதிலாக இளம் வீராங்கனை பல்ஜீத் கவுர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜார்கண்டை சேர்ந்த நிக்கி பிரதான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.