அயோத்தி இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த இருவரை உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் (STF) போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி STF தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் அயோத்தி இராமர் கோவிலை தகர்க்கப்போவதாகவும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கொல்லப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த எஸ்டிஎப் போலீசார், லக்னோ கோண்டாவைச் சேர்ந்த தஹர் சிங் மற்றும் ஓம் பிரகாஷ் மிஸ்ராவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு மொபைல் போன்கள், வைஃபை ரூட்டர் மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.
தேவேந்திர திவாரியின் உத்தரவின் பேரில், தஹர் சிங் போலி மின்னஞ்சல் ஐடியை உருவாக்கி மிரட்டல் விடுத்ததாகவும், அந்த மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லை ஓம் பிரகாஷ் மிஸ்ராவுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாகவும், எஸ்டிஎஃப் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.