தற்போது உலகின் உயரமான கட்டடமாகத் திகழும் 2,717 அடி உயரம் கொண்ட துபாய் நகரின் “புர்ஜ் கலிஃபா”வை ஜெட்டா டவர் ஓவர் டேக் செய்யப்போகிறது. இதனால், உலகின் உயரமான கட்டடம் என்ற அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்கப் போகிறது.
மேற்கு ஆசியாவில் உள்ள மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் 2,717 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான கட்டடமான “புர்ஜ் கலிஃபா” (Burj Khalifa) அமைந்திருக்கிறது.
2004-ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகள், 2009-ம் ஆண்டுதான் நிறைவடைந்தது. 163 மாடிகளைக் கொண்ட இக்கட்டடம், 828 மீட்டர் உயரம் கொண்டது. இக்கட்டடம் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.
இந்த புர்ஜ் கலீஃபாவைக் காண்பதற்காகவே உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் துபாய்க்கு சுற்றுலா வருகின்றனர். மேலும், பெரிய பெரிய நிறுவனங்கள் புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்வதை பெருமையைகக் கருதுகின்றன.
இந்த நிலையில்தான், உலகின் உயரமான கட்டடம் என்கிற அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆம், இதை விட உயரமாக கட்டடத்தைக் கட்ட சௌதி அரேபியா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது மேற்கு ஆசியாவில் உள்ள மற்றொரு அரபு நாடான சௌதி அரேபியாவில், செங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரம் ஜெட்டா. இந்நகரின் வடக்கே ஜெட்டா எகனாமிக் சிட்டி எனும் பெயரில் நகர மேம்படுத்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இங்கு, கிங்க்டம் டவர் என்று அழைக்கப்படும் ஜெட்டா டவர் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் உலகில் இதுவரை இல்லாத கட்டடக்கலை வேலைப்பாடுகள் மற்றும் நுணுக்கங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை சௌதி அரேபிய இளவரசர் அல் வலீத் பின் தலால் மிகவும் தீவிரமாக முன்னெடுத்திருக்கிறார். இக்கட்டடத்தை வடிவமைப்பவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தைச் சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் என்கிற கட்டட வடிவமைப்பாளர்.
இவர்தான், புர்ஜ் கலிஃபா கட்டடத்தையும் வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைவழி முறைகளைக் கையாண்டு இக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டடத்தின் 157-வது மாடியில் சுமார் 100 அடி விட்டத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து வானையும், நகரையும் ரசிக்கும் வகையில் ஒரு அரங்கமும் அமையவிருக்கிறது. இக்கட்டடம் கட்டி முடிக்கப்படும்போது, 3,281 அடி உயரம் கொண்ட ஜெட்டா டவர்தான் உலகிலேயே ஒரு கிலோ மீட்டர் உயரம் கொண்ட முதல் கட்டடம் என்னும் புகழைப் பெறும் என்கிறார்கள்.