பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து கேலி செய்யும் வகையில், மாலத்தீவு அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவுக்கு, அந்நாட்டின் முன்னாள் அதிபர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் லட்சத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது லட்சத்தீவு பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கதில் நினைவுகூர்ந்திருந்தார்.
அப்போது, கடற்கரையில் வாக்கிங் சென்றது, ஸ்நோர்கெலிங் செய்தது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்து தீவு நகரம் குறித்தும், அம்மக்கள் குறித்தும் தனது கருத்துகளை பகிர்ந்திருந்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு, அடுத்த 2 நாட்கள் கூகுளில் அதிகம் தேடப்படும் வார்த்தையாக இருந்தது.
இதனிடையே, பிரதமர் மோடியின் இப்பதிவை பார்த்துவிட்டு, மாலத்தீவை ஆட்சி செய்து வரும் பி.பி.எம். கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ், இந்தியர்களை கேலி செய்தும், இனவெறியை காட்டும் வகையிலும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அப்பதவில், “இந்த நடவடிக்கை என்பது பெரியதுதான். எனினும், எங்களுடன் போட்டியிடுவது என்பது ஒரு மாயை போன்றது. ஏனெனில், நாங்கள் வழங்கும் ஆபர்களைபோல் அவர்கள் எப்படி வழங்க முடியும்? எப்படி சுத்தமாக இருக்க முடியும்? மேலும், அறைகளில் இருந்து நிரந்தரமாக வரும் கெட்ட நறுமணம் பெரிய பின்னடைவாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
அதாவது, இந்தியர்களை சுகாதாரமற்றவர்கள் எனவும், அழுக்கானவர்கள் எனவும் ஜாஹித் ரமீஸ் மறைமுகமாக தெரிவித்திருந்தார். இதைப் பார்த்துவிட்டு நெட்டிசன்கள் கொதித்தெழுந்தனர்.
மேலும், இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிக்க வேண்டும். மாறாக, லட்சத்தீவு உள்ளிட்ட இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதோடு, ஜாஹித் ரமீஸ் இனவெறி சார்ந்த கருத்துகளை தெரிவித்திருப்பதாகவும் சாடி வருகின்றனர்.
அதேபோல, பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை விமர்சித்து மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியூனா, அப்துல்லா மஹ்சூம் மஜித் உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய வகையில் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தனர்.
அப்பதிவில், இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது என்றும், கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடனான போட்டியில் இந்தியா பல சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், மாலத்தீவு அமைச்சர்களின் கேலி, கிண்டலுக்கு அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அமைச்சர் மரியம் ஷியூனா பயன்படுத்தும் மொழி “பயங்கரமானது”. மாலத்தீவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா “நெருங்கிய கூட்டாளி” என்று கூறியிருக்கிறார்.
மாலத்தீவின் புதிய பிரதமராக முகமது மூயிஸ் கடந்த நவம்பர் மாதம் பதவியேற்றார். இதன் பிறகு, இந்திய இராணுவம் உடனடியாக மாலத்தீவிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால், இந்தியா – மாலத்தீவு உடனான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.