ராமர்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிவித்துள்ளது சனாதன விரோத மனநிலையை பிரதிபலிப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரசின் இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ராமர் எதிர்ப்பு முகம் தேசத்தின் முன் தற்போது வெளிப்பட்டுள்ளதாகவும், ராமர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த சோனியா காந்தியின் தலைமை, ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பை நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி சனாதன தர்மத்தை மீண்டும் அவமதித்துள்ளதாகவும், இது அவர்களின் சனாதன விரோத மனநிலையை பிரதிபலிப்பதாகவும் அமைச்சர் ஸ்மிருதி ராணி கூறியுள்ளார்.